செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பல்வேறு கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

418 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன