
மார்கன் விமர்சனம் 3/5
விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே கலவையான எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
அறிவியலும் ஆன்மீகமும் கலந்த திரைக்கதை.
‘நினைவுகளின் வழியே பயணிப்பவன்’ என்ற பொருள் கொண்ட சித்தர்கள் மொழியின் ‘கனன மார்கன்’ என்ற தலைப்பில் உருவாகிய இந்த படத்தை, இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார்.
மிக வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக தர வேண்டும் என முயற்சித்த இயக்குனர் முதல் பாதி கதையில் காட்டிய வேகத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் மார்கன் அதிக மார்க் வாங்கி இருப்பான்.
கதைதொடங்கும் போதே,
சென்னையில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு உடல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு கிடக்கிறது.
அதோடு உடல் முழுதும் கருப்பாக மாறியிருப்பதை பார்த்து போலீஸ் அதிர்ச்சி அடைகிறது.
இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனியிடம் இந்த வழக்கை விசாரிக்க சொல்கிறார்கள்.
கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளில் உள்ள ஒரு இளைஞரை தேடும்போது, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் கொலையாளி யார், கொலைகளின் காரணம் என்ன என்பதே ‘மார்கன்’ படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக தொடங்குகிறது. க்ரைம் த்ரில்லராக இருந்தாலும், அதை மிக வித்தியாசமான கோணத்தில் இயக்குனர் சொல்ல முயற்சித்து இருப்பதை வரவேற்கலாம்.
அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. அறிமுக நடிகர் என நம்ப முடியாத படி மிகச் சிறப்பாக நடித்துள்ளதோடு, தண்ணீருக்கடியில் வரும் காட்சிகளில் அதிர வைக்கிறார்.
ஷெல்டன் சௌவின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கிறது.
சித்தர்கள் வழியில் நினைவுகளோடு நீராக பயணிக்கும் காட்சிகளும், கொடும் மரணத்தை ஏற்ப்படுத்தும் ரசாயன ஊசியில் தொடர் கொலை என படம் திக் திக் என பரபரப்பாக நகர்வது திரைக்கதைக்கான பலம்.
போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி, பிரிகிடா இவர்களோடு மகா நதி சங்கர் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவர்கள் வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.
கிரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கிறவர்களுக்கு மார்கன் புது அனுபவம் தருவான்.
கோடங்கி 3/5
