சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

 

நடிகர் சங்க தேர்தலில் நாசர்-விஷால் கூட்டணி சார்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை சந்தித்தது.

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பல முயற்சிகள் நடை பெற்றன.

நடிகர் எஸ்வி சேகர் ஒரு பக்கம் “தனக்குள்ள” அதிகாரத்தை வைத்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தார்.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்தல் நடத்தும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசார் கை விரித்தனர்.

அதே நேரம் எஸ்.வி.சேகர் உட்பட 4 பேர் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் திடீரென கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.

இதை எதிர்த்தும் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்தி முடிக்க போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவு வழங்க பாண்டவர் அணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி தேர்தலை ரத்து செய்த பதிவாளர் உத்தரவுக்கு தடை விதித்தார். எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தார். எல்லாவற்றிக்கும் மேலாக அறிவித்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்றும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கோர்ட் உத்தரவு வரும்வரை நிறுத்தி வைத்து உத்தவிட்டார்.

இதையடுத்து 23ம் தேதி திட்டமிட்டபடி நடிகர் சங்க தேர்தல் நடந்தது.

அதே நேரம், தேர்தல் நடத்த உத்தவிட்ட அதே நேரம் சுவாமி சங்கரதாஸ் அணியின் பொதுச் செயலாளர் வேட்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் அவரது நண்பர் அன்ந்த ராமன் ஆகிய இருவர் மீதும் வழக்கில் தலையிட்டு இடையூறு செய்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன் வந்து போட்டிருப்பதாக நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தது திரையுலகில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதற்காக ஐசரி கணேஷ் மீதும் அவர் நண்பர் அனந்த ராமன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன் என நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அதில் மிக குறிப்பாக “22ம் தேதி அன்று தாக்கலான நடிகர் சங்க தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் என்றும், வழக்கு விசாரணையை மேலும் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட வேண்டும். தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்தாமல் தடை விதிக்க வேண்டும். ஐசரி கணேஷ் இந்த விவகாரங்களில் அதிக ஆர்வத்தோடு இருப்பதால் அவருக்காக இந்த உதவியை செய்யும்படி அனந்த ராமன் தொலைபேசியில் பேசி கேட்டுக் கொண்டார் என்றும், அதை நான் மறுத்ததால் என் வீட்டிற்கே வந்து நேரிலும் இதே விவரங்களை குறிப்பிட்டார். அந்த நேரம் வழக்கு விசாரணை முடிவை தெரிந்து கொள்ள என் வீட்டு வாசலில் ஏராளமான செய்தியாளர்கள் கூடியிருந்தனர்.

வழக்கு விசாரணையில் யார் தலையீடும் இருக்க கூடாது. நண்பராக இருந்தாலும் அனந்த ராமன் வழக்கு விசாரணையில் தலையிட்டது தவறு. அதிலும் ஐசரி கணேஷ் கேட்டுக் கொண்டார் என்பதற்காக நீதிமன்ற விவகாரங்களில் தலையிட்டது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் ஆகிறது.

அதிலும் இத்தகைய கிரிமினல் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

எனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 4 வாரங்களில் ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரும் எழுத்து பூர்வமாக தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என நீதியரசர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசர் கிடுக்கிப் பிடி கேள்விகளோடு எந்தெந்த நேரத்தில் இது தொடர்பாக பேசினார்கள் என்பதை நேரத்தோடு, தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

1,133 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன