வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

 

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான்.

வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள்.
அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது.

கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள்.

பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளை சொன்னபடி முடிக்காததால் அவர்களை எதிர்த்து போட்டியிடுவதாக சொல்லுகிறார்கள்.

உண்மையில் அந்த பகுதிவாசிகள் பலரின் வழக்கு, எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு ஆகியவற்றால் தான் இந்த தாமதம் என்பதை சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு தெரிந்தும் தேர்தலுக்காக இருக்கும் ஒரே ஆயுதமாக தாமதமான கட்டட விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட இயக்குனர் சங்கத்தின் தலைவராக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த பாக்யராஜ் திடீரென நடிகர் சங்கத்திற்கு வந்ததே அவர் மீது இருக்கும் “மிஸ்டர் கிளீன்” இமேஜ் தான்.

மனதில் பட்டதை அப்படியே சொல்லியும் செய்தும் பழக்கப்பட்ட பாக்யராஜ் சமீபத்தில் எழுத்தாளர் சங்கத்தில் “சர்கார்” பட கதை திருட்டு விவகாரத்தில் அதிரடி முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளீன் இமேஜ், மனதில் பட்டதை பட்டென பொது வெளியில் உடைப்பதுதான் இயக்குனர் நடிகர், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

:நன்றி வீடியோ கட்” தாய் சினிமாஸ்”

சுவாமி சங்கரதாஸ் அணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து முடித்து விட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்…

அங்கே தான் சிக்கலே…

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் பேசும் போது… “சிலர் சொல்வாங்க நாடக நடிகர்களுக்கு காசு கொடுத்து ஓட்டு கேக்குறாங்கன்னு… நாடக கலைஞர்களை பாக்க போனா காசு கேப்பாங்க… ஏன்னா அவங்க எப்பவுமே கஷ்டதுலதான் இருக்காங்க…நாங்க கஷ்டத்துல இருக்கோம் ஓட்டு கேக்க வந்துட்டன்னு சொல்வாங்க… அதனால இந்தா இப்போதைக்கு இத வைச்சிக்க ஆட்சிக்கு வந்ததும் மத்தத பாத்துக்கலாம்னு சொல்லுவோம்… அது நான் போனாலும் அதான்… வேற யார் போனாலும் அதான்.” என நாடக நடிகர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப் போகிறோம் நாங்கள் என்று பாக்யராஜ் பகிரங்கமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் தங்களது அணி வெற்றிக்கு ஓட்டுக்களை பணம் கொடுத்து தான் வாங்க போகிறோம். காரணம் ஓட்டு போடும் பலரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் அதனால் பணம் கொடுக்கிறோம். நாங்கள் அல்ல யாரும் இதை தான் செய்வார்கள் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாண்டவர் அணியை சேர்ந்த பலரையும் “வெயிட்டாக” கவனித்து தன் பக்கம் இழுத்து கொண்டார் என்று பொது செயலாளர் பதவிக்கு போட்டி போடும் ஐசரி கணேஷ் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதை உறுதி படுத்தும் விதமாக ஐசரி கணேஷ் அருகில் இருக்கும் போதே நாடக கலைஞர்களுக்கு பணம் கொடுப்போம் என பாக்யராஜ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் இப்படி பகிரங்கமாக பேசியது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என்பதால் பாக்யராஜ் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் தேர்தல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலை விட இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் பல சுவாரஸ்யமான அதிரடிகள் நடக்கலாம்.

ஒன்று மட்டும் தெளிவாகிறது… சாதனைகள், வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க கலர் கலரான கரன்சிகள்தான் நடிகர் சங்க தேர்தலை தீர்மானிக்குமோ என்ற சந்தேகம் பலமாகவே எழுந்துள்ளது…

– கோடங்கி

2,201 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன